தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் ???

ஏதேன் தோட்டத்தில்
ஏவாள் இல்லாமல் கூட
ஆதாம் வாழ்ந்திருக்க முடியும்
ஆனால் ஆப்பிள் இல்லாமல்
ஒரு நாள்கூட
உயிரோடிருந்திருக்க முடியாது.....
ஜென் கதையொன்று.......

ஆற்றின் இரண்டு கரைகளில் இரு துறவிகள் இருந்தனர். வலதுபுறமிருந்த கரையிலிருந்த துறவி தண்ணீரில் நடந்து காட்டக் கூடியவர். காற்றில் எழுதிக்காட்டக் கூடியவர். இடது புறமிருந்த துறவிக்கு இது போன்ற சித்துகளும் எதுவும் தெரியாது அதனால் அவரிடம் சீடர்கள் வந்து சேர்வது கிடையாது. ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் அவரிடம் வந்து சேர்ந்தான். அவன் ஆர்வத்துடன் நீங்கள் ஏன் மாயங்கள் செய்வதில்லை என்று கேட்டான். அதற்கு இடதுபுறமிருந்த துறவி தான் செய்யும் மாயங்களை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். உனக்காவது புரிகிறதா பார்ப்போம் என்றபடி. எனக்கு பசியெடுத்தால் சாப்பிடுகிறேன். சாப்பிட்டதும் பசி எங்கே போனது என்று மாயமாகயிருக்கிறது. அது போலவே தாகமாகயிருக்கும் போது தண்ணீர் குடிக்கிறேன். தாகம் எங்கே மறைந்தது என்றே தெரியவில்லை. இவை யாவையும் விட பெரிய மாயம். உறக்கம் வந்த போது நான் உறங்கிப் போய்விடுகிறேன் இந்த மொத்த உலகமே எனக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இதெல்லாம் மாயமில்லையா என்று கேட்டார். சீடனுக்கு அவரது அருமை புரிந்து அவரிடத்தில் தங்கிவிடுகிறான்.

(எல்லா இறைதூதர்களும் பசியைப் போக்குவதை தான் முதன்மையான அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பசியைப் பற்றி பேசாத மதமேயில்லை. பத்து பேர் உண்ணும் அப்பத்தை நூறு பேருக்கு பங்கிட்டு கொடுத்ததும். விருந்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியதும் கிறிஸ்துவின் அற்புதங்கள் என்றால் அதனடியில் பசியுணர்ச்சி தான் பிரதானமாகயிருந்திருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு கிடைப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது ஜீவராசிகள் யாவற்றிருக்கும் பொதுவான வழிமுறை. நிலத்தடியில் ஒடும் தண்ணீரை ஒரேயொரு வேப்பமரம் மட்டும் உறிஞ்சிக் குடித்துக் கொள்வதில்லை. காகம் கைப்பிடி சாதத்தைக் கூட கரைந்து காகங்களை அழைத்துத் தான் சாப்பிடுகிறது. இப்போதும் நாம் நமது பிறந்த நாள். திருமண நாட்களில் மிகச் சிறப்பாக நினைப்பது விருந்தை மட்டும் தான். நல்ல உணவளிப்பது தான் நமது அன்பின் பிரதான வெளிப்பாடாகயிருக்கிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது. ஒரு கலாச்சாரத்தை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிப்பது உணவு தான். உணவின் சரித்திரத்தை ஆராயும் போது நாகரீகத்தின் மறுபக்கத்தை அறிய முடிகிறது - எஸ்.ராமகிருஷ்ணன், தீராப்பசி)

எல்லோருக்கும் அவரவர் விருப்பம் போல் வாழவேண்டும் என்று ஆசை இருக்கிறது, எங்கேனும் சமூகத்தில் நம் அமைதியான வாழ்விற்கு பங்கம் விளைவிக்கும் ஏதாவதொன்று நடந்தால் எல்லோரும் ஒவ்வொரு மற்றவரை குற்றம் சொல்கிறோம், விவாதம் செய்கிறோம், மனதின் கோபங்களை, ஆத்திரங்களை, சமூக விமரிசனங்களை, குமுறலை, கவிதையில், எழுத்தில் பதிவு செய்கிறோம். அத்தோடு நம் கடமை முடிந்துவிட்டதா???
நம் தமிழ்ப்பாட்டனார் வள்ளுவரின் குறள் மொழிகளிலிருந்து,

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது (227)
-பட்டினி எனச்சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்போகாது. தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலமாகும்

அற்றார் அழிபசி தீர்த்தல்
அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி (226)
-பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (322)
-இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழவேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது எதுவுமே இல்லை.
சமூகப்பாத்திரத்தில் நமக்கான இடத்தை மனசாட்சியின் ஒப்புதலோடு, சம்மதத்தோடு குறைந்தபட்ச நேர்மையோடு நிறைவாக்கிவிட்டோமா?

நமக்கெல்லாம் உறைக்கவேண்டும் என்பதற்காக,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்....

- என்று பட்டினிப் பசியின் கொடுமையை அனுபவித்து உணர்ந்த பாரதி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.

நாம் உண்மையில் என்ன செய்கிறோம்?
நாம் பட்டினியின்றி சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
அதனால்தான்...
- சிவாஜி 200 கோடிக்கு விற்பனையானதைப் பற்றிச் சிலாகித்துக் கொண்டிருக்கிறோம்.
- நயந்தாராவின் இடுப்பில் சதை வைத்துவிட்டது நமக்கு கவலையாய்- ......................................
இன்னும் .................. நிறைய

நாம் பாரதியை மட்டுமல்ல, காந்தியை மட்டுமல்ல, வள்ளுவரை, புத்தரை, ஏசுவை, நபியை இன்னும் என்னெவெல்லாமோ படிக்கிறோம். சிந்திக்கிறோம் அல்லது அப்படி எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதேனும் செய்கிறோமா? சிந்திக்க வேண்டும், உண்மையாய் சிந்திக்க வேண்டும். ஏதேனும் செய்யவேண்டும்.














This entry was posted on 10:32 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

    uma said...

    கடவுளே...... ஏன் இந்த சோதனை இவர்களுக்கு ?? இந்த கொடிய வேதனையய் எப்படி தீர்ப்பது....

    உணவுகளை வீணடிக்கிறோம்.... குப்பையில் கொட்டுகிறோம்.... துரித உணவு என்ற பெயரில் நம்மை நாமே நம் உடல் நிலையே கெடுத்து கொள்கிறோம்..... அதற்க்காக எவ்வளவ்ளோ செலவு செய்கிறோம்

    ஆனால் இந்த மக்கள் ஒரு வேலை உணவுக்குக்காக செத்து கொண்டிருக்கிறார்கள்.... கடவுளே...... இவர்களின் நிலைமை மாற என்ன வழி ?? நண்பர்களே...... இந்த கொடுமையான நிலையை மாற்ற நம்மால் முடிந்த வழியை கண்டுபிடிக்க பாடுபடுவோமா ??? வாருங்கள் அனைவரும் .......

    தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்...... இந்த கூற்றின் பொருள் எல்லோருக்கும் புரிந்ததே...... ஆனால் இதற்க்காக (இந்த புகைபடத்தில் இருக்கும் மக்களுக்காக) என்ன செய்ய போகிறோம் என்பதே என் கேள்வி ??

  1. ... on Friday, February 06, 2009 1:28:00 pm